சீட் பெல்ட் போட்டு கார் ஓட்டுங்க.. இல்லாட்டி ரூ. 100 அபராதம் கட்டுங்க - போலீஸ்
சென்னை: சென்னையில் டிசம்பர் 2ம் தேதி முதல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிந்துதான் ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம், முக்கியத்துவத்தை வலியுறுத்தி தற்போது சென்னையில் விழி்ப்புணர்வுப் பிரசாரத்தை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
டிசம்பர் 2ம் தேதி முதல் சீட் பெல்ட் போடுவது கட்டாயமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.
காந்தி சிலை அருகே தொடங்கி உழைப்பாளர் சிலை அருகே இந்த பேரணி முடிவடைந்தது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்ட போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தினகரன் கூறுகையில், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை முதல் தடவை மீறுவோருக்கு 100 ரூபாயும், அடுத்த முறையில் இருந்து 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் இதனை கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் சீட் பெல்ட் அணியாததால், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
எனவே, காரை கிளப்புவதற்கு முன்பு சீட் பெல்ட்டை போட்டுக்கொள்வது உங்களுக்கும் நல்லது.. உயிருக்கும் நல்லது.
No comments:
Post a Comment