இறந்த தந்தையை சந்திக்க விரும்பிய மகன்.. பெண் மந்திரவாதியிடம் சிக்கி 2 மாதமாக தவிப்பு
மும்பை: இறந்து விட்ட தனது தந்தையை சந்திக்க விரும்பினார் மும்பையைச் சேர்ந்த 21 வயது வாலிபர். இதையடுத்து ஒரு பெண் மந்திரவாதியிடம் போனார். அந்தப் பெண்ணோ, அந்த வாலிபர் உடல் முழுவதும் சூடு வைத்து கடந்த 2 மாதமாக சித்திரவதை செய்துள்ளார். அந்த வாலிபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். பெண் மந்திரவாதி தலைமறைவாகி விட்டார்.
அந்த நபரின் பெயர் ஜிதேஷ் கோஷோ. வாசி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்ஷனா ஜாதவ் என்ற பெண் மந்திரவாதி, இறந்தவர்களுடன் சந்திக்க வைப்பார் என்று யாரோ சொல்லியதைக் கேட்டு அவரை அணுகினார்.
அந்தப் பெண்ணும் வாலிபரை வைத்து விளையாடி விட்டார்.அதாவது அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து உடலெங்கும் சூடு வைத்துள்ளார். கழுத்தில் ஊசியால் குத்தியுள்ளார். இப்படியாக கிட்டத்தட்ட 2 மாதம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் அந்த நபர்.
இத்தனைக் கொடுமைகளையும் தாங்கினால்தான் உன்னால் உனது தந்தையை சந்திக்க முடியும் என்று அந்தப் பெண் கூறியதால் அதைப் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார் அந்த நபர்.
இந்த நிலையில் இளைஞரின் குடும்பத்தினருக்கு இது தெரிய வந்து அதிர்ந்தனர். உடனே இதைச் செய்ய வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்லனர். ஆனால் அவரோ அதைக் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சமூக சேவகர் ராஜேஷ்ஸ்ரீ கோய்தலே மூ்லம் போலீஸை நாடினர். போலீஸார் வந்து அந்த வாலிபரை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர்.
தற்போது தர்ஷனா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனராம்.
No comments:
Post a Comment