கோவை: தீ விபத்தில் 4 பெண்கள் இறந்த கட்டிடம் இடிப்பு
கோவை: கோவையில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் உயிரிழக்கக் காரணமான வணிக வளாகத்தில் இரண்டு தளங்களை இன்று மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதன் உரிமையாளர் ஆதித்யா ஆவார். இந்த 4 மாடி கட்டிடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாட்வட்ட மக்களை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தபோது இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது தரை தளத்துக்கும் முதல் தளத்துக்கும் மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் 2-வது தளத்துக்கும் 3-வது தளத்துக்கும் அனுமதி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அந்த 2 தளத்தையும் இடிக்க மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்குள்ளாக கட்டிட உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டிடத்தை இடிக்க தடை உத்தரவு பெற்றார்.
இதையடுத்து கட்டிடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற விதிமுறைகளை மீறி கட்டியுள்ள 2-வது, 3-வது தளத்தை இடித்துவிட உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அவர்கள் 2-வது, 3-வது தளத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment