மமதா மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவின்பேரில் பழங்குடியின பெண்ணை பலாத்காரம் செய்த 12 பேர்
பிர்பம்: மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவின்படி 12 பேர் ஒரு பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்தார். இது குறித்து அறிந்த பஞ்சாயத்தினர் மாற்று ஜாதி ஆளை காதலித்த குற்றத்திற்காக ரூ.50,000 அபராதம் விதித்தனர். அந்த பெண் அபராதத்தை செலுத்தாததால் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணையும், அவரது காதலரையும் கடந்த திங்கட்கிழமை முழுவதும் சிறை பிடித்து வைத்தனர்.
தங்களால் அவ்வளவு பெரிய தொகையை அபராதமாக செலுத்த முடியாது என்று அப்பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பஞ்சாயத்து கடந்த செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து பஞ்சாயத்து உத்தரவுப்படி 12 வாலிபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை செவ்வாய்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் காலை அந்த பெண்ணின் குடும்பத்தார் லாபூர் காவல் நிலையத்தில் நடந்தவை குறித்து புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவர் சுனில் சோரன் உள்பட 11 பேரை கைது செய்தனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். கைதான சோரனும் அப்பெண்ணை பிறருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment