டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் மரணம்!
டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் தாய்லாந்தில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 51.
தாய்லாந்து பிரிவு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கார்ல் ஸ்லிம் பேங்காக் சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஓட்டலின் மாடியிலிருந்து தவறி விழுந்து அவர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்ல் ஸ்லிம் மறைவுக்கு டாடா மோட்டார்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கார்ல் ஸ்லிம் திடீர் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறிய அவர், கார்ல் ஸ்லிம் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர் கார்ல் ஸ்லிம். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 2012ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பதவியேற்றார். இந்தியா மட்டுமின்றி, தாய்லாந்து, ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் தென் ஆப்ரிக்க டாடா மோட்டார்ஸ் வர்த்தக விவகாரங்களையும் கார்ல் ஸ்லிம் கவனித்து வந்தார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொறுப்பேற்றது முதல் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார். ஆயிரக்கணக்கான சப்ளையர்களை ஒரு முகப்படுத்தியதோடு, சிக்கன நடவடிக்கையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் அமல்படுத்த இருப்பதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டியதுடன், அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஃபால்கன்4 மற்றும் ஃபால்கன்5 கார்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் கார்ல் ஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment