கைக்குழந்தையை கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம்: பெண்ணுக்கு ஆயுள்தண்டனை
கோவை: இரண்டாவது திருமணம் செய்வதற்காக முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த நாராயணி (எ) நதியா, 30, இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜோதி என்ற பெண் குழந்தை இருந்தது. இக் குழந்தை பிறந்த 6 மாதத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் இருவரும் பிரிந்தனர். ஆனால், குழந்தை ஜோதி தாயார் நதியாவிடம் வளர்ந்தது.
இந்நிலையில், தேவகோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு நதியாவை இரண்டாம் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பேசி முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதித்தனர்.
ராமசாமி, கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார் அதனால், அன்னூரில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2012 ஆகஸ்ட் இறுதியில் திருமணத்துக்கு இரண்டு நாள்கள் இருந்தபோது, நதியாவையும் குழந்தையையும் அன்னூருக்கு அழைத்து வந்தார் ராமசாமி. இந்நிலையில் தன்னுடைய முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தையின் மீது நதியாவுக்கு வெறுப்பு ஏற்படவே திருமணத்துக்கு முதல் நாள் இரவு தனது குழந்தையை கழுத்தை இருக்கி கொலை செய்து, கிணற்றில் வீசினார்.
இதை நேரில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த கமலவேணி என்பவர் இது குறித்து நதியாவிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அன்னூர் போலீஸில் கமலவேணி புகார் கொடுத்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ் விசாரித்தபோது, முதல் கணவருக்குப் பிறந்த குழந்தை உடனிருப்பதை இராமசாமி விரும்பாததால், குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாக நதியா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நதியாவை போலீஸார் கைது செய்து, அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, கோவை குண்டு வெடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூரபாண்டியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைக்க முயன்றதற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும் நதியாவுக்கு விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment