Search This Blog

Tuesday, 31 December 2013

தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார் – பலரது தலைகளுக்கு மேல் கத்தி!

தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார் – பலரது தலைகளுக்கு மேல் கத்தி!

தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார் – அழைப்பு விடுத்தவரும் வழமை போல் தன் வேலைகளில்…
ஆனால் பலரது தலைகளுக்கு மேல் கத்தி!

அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனது விடுதலையின் பின், அவருடன் தொடர்புபட்டிருந்தவர்களுக்கு சங்கடமான அல்லது ஆபத்தான நிலமைகள் தோன்றக்கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மகா பிரபாகரனது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகளை இலங்கை பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு கைப்பற்றி தம்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மகா பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை இலங்கையரசின் புலனாய்வுப்பிரிவு நெருக்கடிக்குள்ளாக்க் கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
தனது கைத்தொலைபேசியினை வடக்கின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருப்பதாக மகா தமிழ் பிரபாகரன் தெரிவித்திருந்த போதும் அது தம் வசமில்லையென அந்தப் பிரமுகர் மறுத்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் இலங்கையிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் பல அரச புலனாய்வாளர்களின் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

சில காலங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் வடக்கிற்கு விஜயம் செய்த தமிழ் மகாபிரபாகரன் அப்பொழுது திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலித்தடம் தேடி என்ற தொடரை எழுதி வெளியிட்டுப் பிரபல்யமடைந்தார். குறித்த அந்த பயணத்தின் போது அவருக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளெனப் எனப் பலரும் ஒத்துழைத்தனர். போதிய தகவல்களை வழங்கியிருந்தனர். தமது வீடுகளில் தங்குமிடம் வழங்கினர். தமது மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச்சென்று பாதுகாப்பான பயணங்களிற்கும் உதவினர். அவர் தனது கட்டுரைத்தொகுதியை திரு வை.கோ அவர்களை வைத்து வெளியிட்டார். அதனைக் கூடங்குளத்திலும் வெளியீடு செய்தார்.

அண்மைக் காலத்தில் தமிழகத்திலிருந்து சொல்லிக் கொள்ளத்தக்கதாக ஊடகவியலாளர்கள் எவரும் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு சென்றிருக்கவில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பான விடையங்கள் தமிழ் நாட்டில் இன்னும் கவன ஈர்ப்பைப் பெறுவதை உணர்ந்து கொண்ட பலருள் ஒருவரான மகாப்பிரபாகரன் மீண்டுமொருமுறை ஈழத்துக்கு சென்று செய்திகளை திரட்டவும் ஊடகவெளிப்பாடுகளைச் செய்யவும் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

மகா பிரபாகரன் முன்பொருகால் ஏற்கனவே ஆனையிறவில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும் அப்பொழுது தமிழ்ப் பிரபாகரன் பலதரப்பட்டவர்களோடு கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக இனியொருமுறை இலங்கைக்கு வரும் பட்சத்தில் இலங்கையரசால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டிய நபர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டவராகி இருப்பார் எனச் சில மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மகாப்பிரபாகரனை எச்சரித்திருந்ததை அடுத்து தனது பயணத்தை அவர் அப்போது கைவிட்டிருந்தார். எனினும் பின்னர் தனது நண்பர் ஒருவரை அனுப்பி தனது எழுத்திற்கு தேவையான அனைத்தினையும் ஒளிப்பதிவு செய்துகொண்டுமிருந்தார்.

ஆயினும் மீண்டும் வடகிழக்கிற்கு செல்வதற்கு அவர் விருப்பம் கொண்டிருந்த போதும் அவர் தொடர்பு கொண்ட பலரும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன் வரவேண்டாம் என ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். இனிமேல் வரும் போது அரசினால் கைது செய்யப்படும் சாத்தியங்கள் பற்றியும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த்து. இந்த ஆலோசனையின் நோக்கம் பிரபாகரனுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களைப்பாதுகாப்பதாகும்.

ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி மகா பிரபாகரனை வடக்கு கிழக்கிற்கு வர ஊக்குவித்தவர் அவருடன் தொடர்புடைய ஒரு பிரமுகர் என்பது பின்னர் செய்தியாக வெளிவந்தது.

இலங்கையின் அரசியற் சூழ்நிலைகளை நன்கு விளங்கிய ஒருவர் ஒரு ஊடகவியலாளனைத் தன்னுடனே தங்க வைத்து தனது செயற்பாடுகள் யாவற்றுக்கும் கூடவே அழைத்துச் சென்று இலங்கையரசு அவ்வூடக வியலாளனைக் கைது செய்ததும் அவர் உடகவியலாளர் என்பதே தனக்குத் தெரியாதென்று பின்வாங்கிவிட்டார்.

இங்கே எழுகின்ற சில முக்கியமான கேள்விகளை நாங்கள் மக்கள் முன் வைக்கக் கடைமப்பட்டிருக்கிறோம்.

தான் கைது செய்யப்படும் சாத்தியமிருக்கிறது என்பதை அறிந்துகொண்டும் இலங்கைக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளனின் துணிவைப்பாராட்டும் அதேவேளை அவர் தனது தகவல் மூலங்களைப் பாதுகாக்கும் முன் எச்சரிக்கையைக் கொண்டிருந்தாரா என்பது முதலாவது கேள்வி இலங்கையின் புலனாய்வுபிரிவின் விசாரணைகளை எப்படி எதிர்வுகொள்வது என்பது தொடர்பாக முன் தயாரிப்புகளைச்செய்திருந்தாரா என்பது இரண்டாவது கேள்வி.

இலங்கைப் பாதுகாப்பு தரப்பு கடுமையான உளநெருக்கடிகளை வழங்கித் தமக்கு தேவையான தகவல்களைப் பெறக்கூடிய திறமையானவர்களைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய விசாரணைப் பொறிமுறை பற்றிய எந்தவித முன்னனுபவமும் அற்ற மகா தமிழ் மகாபிரபாகரனுக்கு இலங்கைப் பாதுகாப்பு தரப்பிடம் அகப்பட்டுக்கொண்ட நிலையில் அனைத்தையும் உளறுவதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது எனக் கவலை வெளியிடப்பட்டு உள்ளது.

இலங்கையில் சனநாயகம் இல்லை என்பது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நிகழ்ந்து வரும் சம்பவங்களினால் உறுதிப்படுத்தப்பட்டு விடிருக்கிறது. இதனை வெளியுலகத்திற்கு அறிவிப்பதற்காவே நாங்கள் இங்கு வந்து கைதானோம் என்று யாரும் கூறத்தேவை இல்லை என்கிறார்கள் அங்கு தொழிற்படுவர்கள்.

உண்மையிலும் தமிழ் மக்களின் நிலமைகளை வெளியுலகிற்கு அறிவிக்க விரும்பினால் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் உண்மையான புலனாய்வுச் செய்தியாளர்களாகவே வந்து இலங்கையரசின் கண்களில் மண்ணைத் தூவி செய்திகளைச் சேகரித்துப் பின் வெளியே சென்று அவற்றை வெளியிடுங்கள் என்கிறார்கள் மக்கள்.

பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் இலங்கையில் தொழிற்படும் மக்களையும் செயற்பாடாளர்களையும் சன்நாயகச் சிந்தனையற்ற பாதுகாப்புச் செயலாளரின் தலைமைலயில் இயங்கும் சட்டத்துக்கு புறம்பான படைகளிடம் மாட்டி விட வேண்டாம் என்றும் மக்கள் கோருகிறார்கள். இது மகா தமிழ்ப் பிரபாகரனுக்கு மட்டுமல்ல மக்களுக்கு உதவுகிறேன் என்று இலங்கைக்கு வரும் எல்லாப்பிரமுகர்களுக்கு பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.

மகா தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார். அழைப்பு விடுத்தவரும்; வழமை போலத் தனது வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால் தமது தலைகளுக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கி விட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களே மற்றும் சில முக்கியஸ்த்தர்கள் கவலை வெளியிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment