நண்பரின் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது!
காத்மாண்டு: நேபாளத்தைச் சேர்ந்த 35 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் செய்த தவறு, அவரது நண்பரின் மனைவி பெயரை தனது நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டதே.
இப்படி ஒரு வழக்கில் நேபாளத்தில் ஒருவர் கைது செய்யப்படுவதே இதுவே முதல் முறை என்று நேபாள போலீஸ் துறையினர் கூறியுள்ளனர்.
அந்த நபரின் பெயர் குமார் கேசி. கா்வ்ரே மாவட்டத்தைச் சேர்நத்வர். இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தீவிரமாகி இப்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு வந்து விட்டார்.
போலீஸாரிடம் குமார் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் தனது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நானும், எனது நண்பரும் லாரி டிரைவர்களாக உள்ளோம்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் நண்பரின் மனைவியும், நானும் நெருக்கமாக பழகத் தொடங்கினோம். அடிக்கடி ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர் வந்து விடுவார். இருவரும் சந்தோஷமாக இருப்போம்.
என்னிடம் தனது போட்டோவைக் கொடுத்து பச்சை குத்திக் கொள்ளுமாறு எனது காதலி கூறினார். இதையடுத்து நான் பச்சை குத்திக் கொண்டேன். நான் பச்சை குத்திக் கொண்டதை எனது நண்பர் ஒருவரிடம் காட்டினேன். அவர் மூலம் இது பரவி விட்டது என்றார் குமார்.
தனது மனைவியின் படத்தை குமார் தனது நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதை அறிந்த அப்பெண்ணின் கணவர், கோபமடைந்து தனது மனைவியிடம் உங்களுக்குள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று அடம் பிடித்துள்ளார். இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த பெண்ணின் கணவர் போலீஸில் புகார் கொடுத்து விட்டார். போலீஸார் விசாரணை நடத்தி குமாரைக் கைது செய்தனர்.
No comments:
Post a Comment