நாடு திரும்பினார் தேவ்யானி!
டெல்லி: விசா மோசடி வழக்கில் சிக்கி அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே நேற்று இரவு நாடு திரும்பினார்.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே, தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு விசா பெற்றுத் தந்ததில் முறைகேடு செய்ததாக நியூயார்க் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரைக் கைவிலங்கிட்டு கைது செய்தனர்.
அவரது ஆடைகளை நீக்கி சோதனை செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலால் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தால், இந்திய-அமெரிக்க உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தேவ்யானி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவரை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த அமெரிக்க நீதிமன்றம், தேவ்யானி இந்தியா திரும்பவும் அனுமதித்தது. இதைத் தொடர்ந்து தம் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார் தேவ்யானி.
இதனைத் தொடர்ந்து யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு தேவ்யானி வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே உள்ளிட்ட குடும்பத்தாரும் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் உணர்ச்சிர்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தம் கோப்ரகடே, எனது மகள் தேவயானி கவலை கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றார்.
No comments:
Post a Comment