தூத்துக்குடியை தீர்மானிக்கும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள்
தூத்துக்குடி : தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் என்பதால் அனைத்து கட்சியினரும், சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்களை களம் இறக்க முன் வந்துள்ளன. அ.தி.மு.க., தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் ஜெயசிங் தியாகராஜநட்டர் ஜி,சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். மற்ற கட்சிகளில் போட்டியிடும் நபர்களாக இதே இனத்தை சேர்ந்தவர்களே களம் இறக்கப்படவுள்ளனர். தி.மு.க., தரப்பில் தற்போதைய மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் தான் வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனது மகனை எப்படியும் ஜெயிக்க வைக்க வேண்டும், என பெரியசாமி களம் இறங்கியுள்ளார். இதில் முக்கிய அ.தி.மு.க., புள்ளிகளை வளைக்கும் வியூகத்தை வகுத்து வருகிறார். ஜெகன் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். பா.ஜ. கட்சி கூட்டணி சார்பில் ம.தி.மு.க., தூத்துக்குடி தொகுதியை குறி வைத்து களம் இறங்கியுள்ளது. இதில் வேட்பாளராக ம.தி.மு.க.,வின் மாவட்ட செயலாளராக இருக்கும் ஜோயலுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் நிலை உள்ளது. ம.தி.மு.க., தரப்பில் மீனவர்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், என வாக்காளர்களை வளைத்து வருகின்றனர். இவரும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். இந் நிலையில் பா.ஜ., கட்சி தரப்பில் இந்து மதத்தை சார்ந்தவரை போட்டியிட வைக்க வேண்டும், என தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர். அது எடுபடாத நிலை உள்ளது. முக்கிய கட்சிகள் சார்பில் களம் இறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் என்பதால், தூத்துக்குடி தொகுதி வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கப்போகிறவர்கள் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்களாக உள்ளனர்.
No comments:
Post a Comment