Search This Blog

Saturday, 20 April 2013

ஒரே நாளில் 20 பேர் அனுமதி குலசேகரம் பகுதியில் பரவுகிறது மர்ம காய்ச்சல்

ஒரே நாளில் 20 பேர் அனுமதி குலசேகரம் பகுதியில் பரவுகிறது மர்ம காய்ச்சல்

   குலசேகரம்: குலசேகரம் பகுதியில் மர்ம காய்ச் சல் வேகமாக பரவுகிறது. ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டவர்கள் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.குமரி மாவட்டம் குலசேகரம் மலையோர பகுதிகளோடு தொடர்புடைய பகுதியாகும். இங்கு 3 மருத்துவக் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், வியாபார நிலையங்கள் என நிரம்பி இருப்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. சாலையோர மழைநீர் வடிகால்கள் அனைத்தும் கழிவுநீர் கால்வாய்களாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகும் பகுதிகளாகவும் மாறி விட்டது. குலசேகரத்தின் ஒரு பகுதி வழியாக பேச்சிப்பாறை மெயின் கால்வாயான கோதையாறு இடதுகரை கால்வாயும், மற்றொரு புறத்தில் சிற்றாறு பட்டணங் கால்வாயும் செல்கிறது. குலசேகரம் பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் இந்த கால்வாய்களில் சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாய்களில் எப்போதும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீரும் மாசுப்பட்டுள்ளது. இதை போன்று குலசேகரம் சந்தையில் அனைத்து பகுதியிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குலசேகரம் அரசு மருத்துவமனை அமைந்து இருக்கும் அண்ணா நகர் பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளூர் மற்றும் வெளியூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குலசேகரம் அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 9 குழந்தைகள் உள்பட 20 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் வந்தவர்களுக்கு கை, கால் மூட்டு பகுதிகள், கணுக்கால்கள் போன்றவைகளில் வீக்கமும், வலியும் இருப்பதாகவும், நடமாட முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment