வங்கதேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்த விபத்து : பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு
தாகா: வங்கதேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1000 பேர் படுகாயம் அடைந்தனர். வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சவர் நகரம் உள்ளது. இங்கு ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் உள்ளது. 4 மாடிகளில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், மற்ற பகுதியில் மார்க்கெட், பிராக் வங்கி கிளை, பல கடைகள் இயங்கி வந்தன. இந்த கட்டிடத்தில் நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தெரிகிறது. காலை 8.45 மணியளவில் பயங்கர சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துவங்கினர். பின்னர், போலீசார், தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தா¬கை£-அரிச்சா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கட்டிட இடுபாடுகளில் சிக்கி 80 பேர் இறந்ததாக நேற்று முதல் கட்ட தகவல் வெளிவந்தது. மேலும் பலர் இடிபாட்டில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
நேற்று இரவு முழுவதும் மீட்பு பணி நடந்தது. இடிந்த கட்டிடத்தை உடைத்து எடுத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்பு படையினர் மீட்டனர். இடிபாட்டில் சிக்கி இறந்த 147 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் ஏராளமானோர் கை, கால்களை இழந்துள்ளனர். சிலருக்கு தோள்பட்டை பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தோர் சவர், தாகா பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலரை காணவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் முஹியுதின் கான் ஆலம்கிர் கூறுகையில், 'கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கட்டிடம் முறையாக கட்டப்படாதது விபத்துக்கு காரணமாக இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment