Search This Blog

Thursday, 30 May 2013

காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் : ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் : ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

புதுடில்லி: சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம், வரும், 1ம் தேதி முதல், 18 மாவட்டங்களில் மட்டும் அமலுக்கு வருகிறது. மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது: மத்திய அரசின் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை உதவியுடன், நேரடியாக, பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையும், பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளன.
முதல் கட்டமாக, வரும், 1ம் தேதி முதல், 18 மாவட்டங்களில், இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், புதுச்சேரியும் அடக்கம். ஏற்கனவே, 20 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தல் காரணமாக, அங்குள்ள ஒரு மாவட்டத்திலும், இமச்சால் பிரதேசத்தில் நடந்த, லோக்சபா இடைத் தேர்தல் காரணமாக, அங்குள்ள ஒரு மாவட்டத்திலும், இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இதனால், 18 மாவட்டங்களில் மட்டும், முதல் கட்டமாக, இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும், இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். இவ்வாறு, அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு முறை சிலிண்டர் பதிவு செய்யும் போதும், அவர்களுக்கான மானிய தொகையான, 435 ரூபாய், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். சிலிண்டர் வாங்கும்போது, சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு உள்ளவர்கள் மட்டுமே, இந்த திட்டத்தில் பயன் பெற முடியும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment