செல்போனை உடைத்த மாமியார் தலையில் அம்மியை போட்டு கொலை
இந்தியாவில் கையடக்கத் தொலைபேசியை தூக்கிப் போட்டு உடைத்த மாமியார் தலையில், அவரது மருமகள் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துள்ளார்.
மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1½), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதங்கள் ஆகின்றன. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்.
குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் செல்வி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இன்று காலை 7 மணி அளவில் குளோரி அவரது வீட்டின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார், குளோரியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது. குடும்பத் தகராறில் மருமகள் அம்மிக்கல்லை தூக்கி போட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment