மகளிர் சுயஉதவி குழுவினர் வாங்கிய கடனுக்கு ரூ.1,400 கோடி வட்டி மானியம்
புதுடெல்லி: தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வங்கிகளில் கடன் பெறும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.சுய உதவி குழு பெண்கள் வாங்கிய கடன்களுக்கு தற்போது ரூ.1,400 கோடி மதிப்பிலான வட்டி மானியத்தை தேசிய ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இச்சலுகை வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வட்டி மானிய சலுகை குறித்து மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்ர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நக்சல் அபாயம் உள்ள மாவட்டங்கள் உட்பட 150 பின்தங்கிய மாவட்டங்களில், உள்ள மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக அனைத்து வங்கிகளிலும், ரூ.3 லட்சம் வரையிலான கடனை, இன்று முதல் 7 சதவீத வட்டியில் பெறலாம். கடனை சரியாக திருப்பிச் செலுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு மேலும் 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். மொத்தத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி 4 சதவீதமாக இருக்கும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கும், இன்று முதல் 7 சதவீத வட்டி செலுத்தினால் போதும். இதுவரை கூடுதலாக செலுத்தப்பட்ட வட்டி கடன்தாரர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.கடந்த நிதியாண்டில் தேசிய கிராமப்புற வாழ்வாதர திட்டத்துக்கு ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கீட்டில் ரூ.1,400 கோடி வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.இதில் ரூ.650 கோடி வட்டி மானியம் 150 பின்தங்கிய மாவட்டங்களுக்கும், ரூ.750 கோடி வட்டி மானியம் மற்ற மாவட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இது தேசிய கிராமப்புற வளர்ச்சித்துறை அளிக்கும் சலுகை. நிதியமைச்சகம் வழங்கும் சலுகை அல்ல.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
No comments:
Post a Comment