கர்நாடகா அப்பீல் செய்யாவிட்டால், தேமுதிக அதைச் செய்யும்... விஜயகாந்த் அறிவிப்பு
கர்நாடகா அப்பீல் செய்யாவிட்டால், தேமுதிக அதைச் செய்யும்... விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தேமுதிகவே அதைச் செய்ய நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பில் தவறு நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், வருமானம் மற்றும் கடன் கணக்கீடுகளில் தவறு நடந்திருப்பது தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிய வருகிறது. புடம் போட்ட தங்கம் என நம்பி நாம் வாங்குகிற பொன்நகைகள், சில சமயங்களில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பாடத்தை நமக்குத் தந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பிலும் அது தான் நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். உச்சநீதிமன்ற நீதியரசர்களால் பெரிதும் நம்பப்பட்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதியான குமாரசாமி அவர்கள் கணக்கீடுகளில் தவறு செய்திருக்கிறார் என்பது தற்செயலாக நடந்தது போல் தெரியவில்லை. மாறாக ஏதோ ஒரு அழுத்தத்தினால் இது நடந்திருப்பதாக யூகிக்க முடிகிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் பட்டு விடக் கூடாது என்பது நீதி நெறிமுறையில் நீண்ட காலமாக கடைபிடிக்கப் படும் ஒரு கோட்பாடு. ஒரு வேளை இந்த ஆயிரத்தில் ஒருவரோ இந்த ஜெயலலிதா, அதனால் தான் தப்பித்து விட்டாரோ என்று சட்ட வல்லுநர்களும், சமூக அக்கறையாளர்களும் சந்தேகிக்கிறார்கள். இதற்கு முன்பு அரசு ஊழியர்களான ஐபிஎஸ் அதிகாரி ஜெகன் சேஷாத்திரி வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக 3 அயிரம் ரூபாய் அவர் கணக்கில் இருந்தமைக்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. அதேபோல், சுங்கத்துறை அதிகாரி புகழேந்தி என்பவர் சுமார் 90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் கணக்கில் இருந்ததற்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்து சேர்த்ததில் விலக்களிக்கப்பட்ட வழக்கின் விபரம் தெரிந்த நீதிபதிக்கு தண்டனை அளிக்கப் பட்ட வழக்கின் விபரம் மட்டும் தெரியாமல் போனது ஏன் ? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். பாமரரில் இருந்து பணக்காரர் வரை வாக்களித்து ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினால், அதிகார பலமும், பண பலமும் இருக்கின்ற மமதையில் எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்தால் எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்பது இது போன்ற தருணங்களில் தான் நிரூபிக்கப் படுகிறது. ஜெயலலிதாவிற்கு எதிரான இந்த வழக்கில் 18 ஆண்டுகள் முடிவில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. மைக்கேல் டி குன்ஹா அவர்கள் ஆதார ஆவணங்களை அலசி ஆராய்ந்து, ஆய்வு செய்து வரலாற்று சிறப்புமிக்க 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அதனால் தான் அவரை நீதியரசர் என்று சொல்கிறோம். ஆனால், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.குமாரசாமி எதன் அடிப்படையில் இந்த மூன்று நிமிட தீர்ப்பை அளித்துள்ளார் ? இவரை நீதியரசர் என்று சொல்ல முடியுமா ? இது நீதித்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதென மக்கள் பேசுகிறார்கள். எனவே, இந்த வழக்கில் கர்நாடக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் அப்பணியை தேசிய முற்போக்கு திராவிடக் கழகமே மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment